நடப்பு பதிப்பு
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 1-81 (நவம்பர் 2016)
____________________________________________________________
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 1, நவம்பர் 2016
கு. விஜயராகவன்
____________________________________________________________
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 2-24, நவம்பர் 2016
கு. விஜயராகவன், தி. பகவதி புஷ்பா, ஜோ. ஜெகன்
திட்டசுருக்கம்
நீரிலிருந்து மாசுக்களை குறிப்பாக உலோகம் போன்ற எளிதில் மக்காத பொருட்களை நீக்க பயன்படுத்தும்
ஒரு தொழில்நுட்பம் உயிர்பரப்புகவர்ச்சியாகும். பல்வேறு உயிர் பொருட்களான பாக்டீரியா, பூஞ்சை,
பாசிகள் மற்றும் தொழில்துறை, வேளான் கழிவுகள் இந்த மாசுக்களை பிணைப்பதாக அறியப்படுகிறது.
இந்த விமர்சனத்தில், உலோக அயனிகளை நீக்கும் பல்வேறு உயிர் உறிஞ்சிப் பொருட்களின் உருஞ்சும்
திறங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, உயிரியின் ஆக்ககூறுகளில் உள்ள கார்பாக்ஸில்,
அமைன் மற்றும் பாஸ்போனேட் போன்ற செயல்பாட்டுக் குழுக்களின் உயிர் உருஞ்சும் ஆற்றல்கள்
விவரிக்கப்பட்டுள்ளது. உயிர் உருஞ்சி பிணைப்பு பொறிமுறையும், உயிர்பரப்புக்கவர்ச்சி செயல்முறையைப்
பாதிக்கும் காரணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கவர்ச்சி சமவெப்பநிலை, இயக்கவியல்
மற்றும் இதற்காக பயன்படுத்தப்படும் கணிதமாதிரிகள் குறித்து விவரமான விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்ட பல்வேறு உயிர்பொருட்களின் உலோக
பிணைப்புத்திறன் கொண்டு ஒரு முறைப்படுத்தப்பட்ட ஒப்பீடு வழங்கப்படுள்ளது. நுண்ணுயிர்
உயிர்பரப்புகவர்ச்சி தொடர்புடைய பிரச்சனைகளை ஆய்வு செய்து அதன் பொருத்தமான தீர்வு முறைகளும்
விவாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியான கழிவுநீர் சுத்திகரிப்புக்கு, உயிர் உறிஞ்சி நிரப்பப்பட்ட படுக்கை
நிரலை கட்டமைப்பு பரிந்துரைக்கப்பட்டதோடு, அதன் செயல்திறனை பாதிக்கும் காரணிகளும்
விவாதிக்கப்பட்டுள்ளன . இந்த ஆய்வு கட்டுரை மூலம் ஆய்வகங்களில் மட்டும் இல்லாமல், உண்மை
சூழலிலும் உயிர் உறிஞ்சி பொருட்களை பரிசோதனை செய்வது அவசியம் என வரையுறுத்தப்படுகிறது.
இவ்வாறு இந்த கட்டுரை ஆய்வானது, உயிர்பரப்புகவர்ச்சி தொழில்நுட்பத்தின் சாதனைகள், மற்றும்
தற்போதைய நிலை மதிப்புரைகளைத் தருவதோடு இந்த ஆராய்ச்சியில் எல்லை நுண்ணறிவை வழங்கும்
எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
____________________________________________________________
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 25-36, நவம்பர் 2016
சதாசிவம் சுப்ரமணியம், சவிதா சிவசுப்ரமணியன்
திட்டசுருக்கம்
உடலின் உயிர் அணுக்களின் கட்டுப்பாடற்ற பெருக்கம் மேலும் அதனை சுற்றியுள்ள திசுக்களுக்கும் இவை
பரவுவது புற்று நோய் என குறிப்பிடப்படுகிறது. சாதாரண வளர்ச்சிதை மாற்றங்களின் போது,
உயிரணுக்கள் முதுமை அல்லது சேதம் ஆகியவற்றிற்கு ஆளாகும். பின் அவையே ஒன்றன் பின் ஒன்றாக
முறையான வகையில் சீரமைக்கப்பட்டு மறு உருவாக்கம் பெறும். இந்நிலையில் இறந்த உயிரணுக்கள்
அகற்றப்பட்டு புதிய செல்கள் உருவாக்கப்படுகிறது. இப்படியிருக்க புற்றுநோய் வளர்ச்சியின்போது,
சாதாரண உயிரணுக்கள் சைகையிணை புறக்கணித்து அசாதாரண செல் பெருக்கம் ஏற்பட்டு உடலெங்கும்
பரவுகிறது. இவ்வாறாக கூடுதலாக உருவாகிய பிண்டம், தீங்கற்ற அல்லது வீரியம் மிகுதி கொண்ட புற்று
கட்டி என குறிப்பிடப்படுகிறது. மருத்துவரீதியாக, 50-க்கும் மேற்பட்ட வெவ்வேறு புற்றுநோய்கள் உள்ளன.
இவை, அதன் பிறப்பிட அடிப்படையில் பெயரிடப்படுகின்றன. புற்றுநோயானது உடலின் ஒரு
பகுதியிலிருந்து பிறபகுதிகளுக்கு பரவுவது என்பது மெட்டாஸ்டாடிஸ் என்று விவரிக்கப்படுகிறது.
பொதுவாக புற்றுநோயை பரிசோதனை செய்வதற்க்கு, பின்வரும் கருவிகள்/முறைகள்
உபயோகப்படுத்தபடுகிறது: இவை முறையே, பாசிடிரோன் எமிஷன் டோமோகிராப்பி, மேமோகிராஃபி, சிடி
ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஆகும். தற்போதைய நோய் கண்டறியும் உத்திகள் மூலம், புற்றுநோய் கட்டிகள்
நன்கு முதிர்வுற்ற நிலையில் மட்டுமே கண்டறியப்படமுடிகிறது. இவ்வாறு காலம் கடந்து
கண்டறியப்படும் கட்டிகள் குணப்படுத்தக்கூடிய கால வரம்பினை முற்றிலும் கடந்து விட்ட நிலையை
அடைகிறது. மேலும் இந்த உத்திகள், நீர்ப்பாயம் (சீரம்) கட்டி உயிர்குறிப்பான்களான கரு புற்றுநோய்
அயல்பொருள் (ஆண்டிஜென்), புற்றுநோய் அயல்பொருள் 19-9 (சிஎ 19-9) மற்றும் பிறப்புறுப்பு குறிக்கப்பட்ட
அயல்பொருள் போன்றவற்றுக்கு உபயோகப்படாது. அமெரிக்காவில் மட்டும், கடந்த 2015-ல், ஏறத்தாழ
589,430 புற்றுநோய் இறப்புக்கள் மற்றும் 1,658,370 புதிய புற்றுநோயாளிகள் இருப்பதாக
கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே தற்போதைய புற்றுநோய் ஆராய்ச்சிகள், புற்றுநோய்களை தொடக்க
நிலையில் அறிவதற்காக விரைவான, எளிய மற்றும் குறைந்த செலவை கொண்ட புதிய நோய்
கண்டறியும் முறைகளை உருவாக்க முயற்ச்சிக்கின்றன. புற்றுநோய்கள் தொடக்க நிலையிலேயே
கண்டறியப்பட்டால், சுமார் 3 - 35% மரணங்களை தடுப்பதோடு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த
சிகிச்சைக்கான செலவினத்தையும் குறைக்கமுடியும். இதனை கருத்தில் கொண்டு, இந்த விமர்சன
கட்டுரையில் ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பரவலாக காணப்படும் முக்கிய புற்றுநோய்கள் பற்றி
விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போதைய மற்றும் புதிய புற்றுநோய் கண்டறியும் உத்திகள் பற்றியும்
அதன் அனுகூலங்கள் மற்றும் பிரதிபலன்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
____________________________________________________________
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 37-53, நவம்பர் 2016
அ. ஜேசு ஆரோக்கியராஜ், கு. வெங்கடேஷ், சௌ. முகேஷ் குமார்,
நா. பிரசாந்த் பட், நி. ஃபைசல், ர. காயத்ரி, ப. ராஜேஷ்
திட்டசுருக்கம்
மேக்ரோபிராக்கியம் ரோசன்பெர்ஜி பொதுவாக நன்னீர் இறால் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது.
நன்னீரில் உணவுக்காக பரவலாக வளர்க்கப்படுகின்ற கிரிஸ்டேசியன் இனங்களில் இதுவும் ஒன்றாகும்.
இது உருவத்தில் பெரியதாகவும் நன்கு நீந்தக்கூடியவையாகவும் இருக்கின்றன. மே. ரோசன்பெர்ஜி
உலகெங்கும் பரவிக் காணப்படுகிறது. மேலும், இவைகளின் தசைகள் அதிக சுவை கொண்டவையாக
இருப்பதினால் அதிக விலை மதிப்பைக் கொண்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல் உலக அளவில்
இவற்றின் தேவைகள் அதிகமாக இருப்பதினால் இந்த நன்னீர் இறாலானது பொருளாதார முக்கியத்துவம்
வாய்ந்ததாக இருக்கிறது. எனவே இவைகள் உலகெங்கும் அதிகமாக வளர்க்கப்படுகின்றன. ஆயினும் மற்ற
உயிரினங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்பைப் போன்று இயற்வேதியல் மற்றும் உயிரியல் காரணிகளினால்
நன்னீர் இறலின் இனப்பெருக்கம் மற்றும் அதன் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே இந்த
விமர்சனக்கட்டுரையில், மே. ரோசன்பெர்ஜியின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்
இயற்வேதியல் மற்றும் உயிரியல் காரணிகள் மற்றும் அவற்றிற்கு எதிராக செயல்படும் நோய்யெதிர்ப்பு
காரணிகளைப்பற்றி தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
____________________________________________________________
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 54-66, நவம்பர் 2016
பாரத்குமார் நாகராஜ், சந்திரா ச. பட், அணில் கு. சுரேஷ்
திட்டசுருக்கம்
நானோஅறிவியல் மற்றும் நானோதொழில்நுட்பமானது பல்வேறு துறைகளில் மிகப் பெரிய வளர்ச்சி
அடைந்துள்ளது. இவற்றின் தனிப்பட்ட இயற்வேதிய பண்புகளினால் பல்வேறு துறைகளான உயிரியல்,
மருத்துவம் மற்றும் மின்னனுவியலில் பயன்படுத்தப்படுகிறது. நானோதுகள்களின் தனிப்பட்ட பண்புகளான
அதிக பரப்பளவு/கொள்ளளவு விகிதம் மற்றும் குவாண்டம் அடைத்து வைத்தல் விளைவு ஆகியவை ஒரு
பெரிய பொருளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுகிறது. இந்த உயர் பண்புகளினால்
பல்வேறு வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் தொழில்துறைகளில் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், பல
துறைகளின் மேம்பாட்டிற்கு உபயோகபடுவதால் நானோதுகளை வெவ்வேறு முறைகளில்
உருவாக்குவதற்கு பல ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கின்றனர். இந்த விமர்சனகட்டுரையானது நானோ
தொழில்நுட்பம் பற்றி சுருக்கமாகவும், மேலும் நானோதுகள்கள் உருவாக்கம், பண்புகள், நச்சுத்தன்மை
மற்றும் அவற்றின் பயன்பாடுகளான மருந்து மற்றும் மரபணு வழங்கல், குறியிடுதல், மற்றும் பலவற்றை
உள்ளடக்கியுள்ளது. இவைத்தவிர, நானோதுகள் உருவாக்கும் வழிமுறைகள், மேற்பரப்பு பூச்சு மற்றும்
இதனைச்சார்ந்த பயன்பாடுகள் பற்றியும் உயிர்மருத்துவ துறையில் இவற்றின் பயன்கள் குறித்தும்
விவரிக்கப்பட்டுள்ளது.
____________________________________________________________
அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நூல்
பகுதி 1, எண் 1, பக்கங்கள் 67-81, நவம்பர் 2016
பாலசுப்ரமணியன் வைரப்பன்
திட்டசுருக்கம்
ஈரலரிப்புடன் கூடிய உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் அகச்சீத அழற்சி பற்றியும் அண்மை
காலமாக இந்நோய்க்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்தும் இந்த
விமர்சன ஆய்வுக்கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது. அகச்சீத அழற்சியானது கல்லீரல் சார்ந்த
சாதகமற்ற நிகழ்வுகள், நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இறப்பு ஆகியவற்றை
கணிக்கும் உட்குறிப்புக்களைக் கொண்டுள்ளது. கல்லீரல் இரத்த ஓட்டத்தினுள் தழைம உயிரகத்தினால்
(நைட்ரிக் ஆக்சைடு) ஏற்படும் ஏற்றத்தாழ்வுடைய செயல்பாட்டைக் கொண்டு அகச்சீத அழற்சியை
கண்டறியலாம். மேலும், தழைம உயிரகம் குறைந்த அளவு கிடைப்பதனாலும் மற்றும் ரியாக்டிவ்
ஆக்ஸிஜன் இனமானது தழைம உயிரகத்தை அழிப்பதனாலும் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. மேலும் வீக்க
குறியீடுகள் அதிகரிக்கும்போது தழைம உயிரகம் உற்பத்தி தடைபடுவதோடு மட்டுமல்லாமல்
ஈரலரிக்கப்பட்ட கல்லீரலின் அகச்சீத அழற்சிக்கும் காரணமாக உள்ளது. ஆகவே, தழைம உயிரகத்தின்
இருப்பை கல்லீரலின் இரத்த ஓட்டத்தில் அதிகப்படுத்துவதின் மூலமாக அகச்சீத அழற்சி மற்றும்
ஈரலரிப்புடன் கூடிய உயர் இரத்த அழுத்தத்தினால் அவதிப்படும் நோயாளிகளை சரி செய்யலாம் என
கருதப்படுகிறது. மேலும், தழைம உயிரகத்தின் இருப்பை அதிகரிக்க உதவும் சிகிச்சை காரணிகள் அகச்சீத
தழைம உயிரக தயாரிப்பு நொதியின் செயல்பாட்டை மேம்படுத்துவதின் மூலமாகவும் கல்லீரலில்
சமச்சீரற்ற டைமீத்தைல் அர்ஜினெனை குறைப்பதின் மூலமாகவும் செயல்படுகிறது. சமச்சீரற்ற
டைமீத்தைல் அர்ஜினென் என்பது அகச்சீத தழைம உயிரக தயாரிப்பு நொதியின் உள்ளார்ந்த
பண்பேற்றியாகும் மற்றும் ஈரலரிப்புள்ள கல்லீரலினுள் ஏற்படுகிற உயர் இரத்தநாள அழுத்தத்திற்கு இது
ஒரு முக்கிய இடைநிலை காரணியாக உள்ளது. அகச்சீத அழற்சி மற்றும் உயர் இரத்த அழுத்தத்துடன்
கல்லீரல் நோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை சார்ந்த ஆராய்ச்சியானது
முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
____________________________________________________________